Thursday, 10 November 2016

சுயமாகச் செய்வதா? பிதா செய்யச் சொல்லி செய்வதா?

யோவான் 14 மூலம் தேவ ஆவியானவர் இன்று பேசுவார்.

இயேசு சொன்னார் "நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்."

ஆக, இயேசு செய்த கிரியைகள் எல்லாம் பிதாவானவர் செய்து வந்திருக்கிறார். அதனாலேயே அவரின் ஊழியம் நிலைத்தது. அவரின் ஊழியம் இன்றும் பேசப்படுகிறது.

தொடர்ந்து பேசிய வசனம் சீஷர்களுக்கு சவுக்கடியாக இருந்திருக்கும்.

"நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்."

அதாவது தன்னை நம்பாவிட்டாலும் தான் செய்யும் கிரியைகள், அற்புதங்கள் நிமித்தமாக நம்புங்கள் என்கிறார் இயேசு.

அடுத்த வசனமோ மிகப் பெரிய வாக்குதத்தம்.

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்."

இயேசுவின் விசுவாசிக்கு எப்பேர்பட்ட வாக்குதத்தம். இயேசு செய்த கிரியைகளையும், அவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

இயேசுவின் செய்த கிரியைகள் என்னவென்று பட்டியலிட்டோமென்றால் பலர் பலவிதமாக கூறுவர்.

நோய்களை சொஸ்தமாக்கினார்
பிசாசுகளை விரட்டினார்
மரித்தோரை எழுப்பினார்
போதனைகள் பலசெய்தார்
பிறவிக் குருடனை பார்வைப்பெற வைத்தார்

அடுக்கிக் கொண்டே போகலாம்.

எல்லா கிரியைகளை விட, அவர் தன் ஜீவனையே பலியாக கொடுத்தார். யார் யாரெல்லாம் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் நித்திய ஜீவனை அடைவர் என்ற மிகப்பெரிய வாக்குதத்தம் அவருக்குள் இருக்கிறதே. இரட்சிப்பு கொடுக்க வல்லவர் இயேசுவே.

சிலுவையில் "முடிந்தது" என்று கூறும்படி அவர் தனக்கு கட்டளையிட்டது எல்லாவற்றையும் செய்து முடித்தார். பிதாவானவர் தன் வாழ்க்கையில் என்ன செய்ய திட்டமிட்டிருந்தாரோ அதை செய்து முடிக்க இயேசு தன் வாழ்க்கையை அர்பணித்தார்.

இயேசு ஒரே கற்பனை தான் கூறுகிறார். அது அன்பு..  "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்."

பிதாவும், இயேசுவும், பரிசுத்த ஆவியும் உங்களில் வாசம் செய்வார்கள். எப்பேர்பட்ட சிலாக்கியம்! அண்டசராசரங்களும் வானங்களும் கொள்ளாத தேவன், நம்மில் வாசம் செய்கிறார்.

அவர் நம்மில் கிரியை செய்ய நாம் செய்ய வேண்டியது, அவரிடம் அன்பு கூறுவதே. அவரை அன்பு கூறுவது போல ஒருவரிலொருவர் அன்பு கூறுவதே. இப்படி அன்பை நாம் வெளிப்படுத்தினால் போதும். பிதாவானவர் நம்மில் கிரியை செய்ய இடம் தர வேண்டும்.

பிதா என்னில் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு உங்கள் சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களென்றால் பிதாவின் கிரியை எப்படி நடந்தேறும்? பிதாவின் சித்ததை செய்து முடிக்க இயேசுவின் நாமத்தில் பிதா அனுப்பிய பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை கிரியை செய்ய இடம் கொடுக்க வேண்டும்.

நமக்கு தெரியாத காரியங்களையும் நம் மூலம் செய்து முடிக்க வல்லவராக இருக்கிறார் கர்த்தர்.

ஒரு சிறிய சாட்சி

நான் துபாயில் வேலை செய்த காலம். ஆவியில் வளர அந்த காலம் எனக்கு மிக நன்றாக இருந்தது. ஒரு வியாழன், ஷார்ஜாவில் ஒரு கிறிஸ்துவிற்குள் சகோதரனின் வீட்டில் இரவு உணவு உட்கொண்டுவிட்டு தூங்கச் சென்றோம். தூங்கும் முன்னர் கர்த்தரின் சமூகத்தில் சென்று அவர் சித்தம் எங்களில் நிறைவேற ஒப்புக் கொடுத்தோம். சகோதரர் படுத்தவுடன் உறங்கிவிட்டார். நானோ
அன்றிரவு முழுவதும் ஆவியில் விழித்திருந்தேன். என் மாம்சம் தூங்கியதா இல்லையா தெரியாது. ஆவியில் ஒரு பிள்ளை பேறு நடை பெறுவதைக் கண்டேன். அந்த சிசுவின் கழுத்தைச் சுற்றி தொப்புள்கொடி. அந்த சிசுவிற்கு ஊட்டம் அளிக்க வேண்டிய தொப்புள் கொடியே அதற்கு தூக்கு போட்டது போல சுற்றிக்கொண்டது வியப்பாக இருந்தது. ஆவியானவர் என்னை பணிக்க அந்த தொப்புள் கொடியை மெதுவாக எடுத்து விட்டேன்.

இந்த ஆவியின் செயல் முழுவதும் முடிந்து பிள்ளைப்பேறு சிசேரியன் மூலம் நிறைவேறவும் நினைவு வந்தது. பொழுது விடிந்திருக்கக் கண்டேன்.. உடலில் ஒரு அசதியும் இல்லை. உற்சாகமாக எழுந்தேன். அந்த நிகழ்வை அந்த சகோதரனிடம் பகிர்ந்தேன். அவருக்கு ஆச்சரியம். இப்படியும் நடக்குமா? நீ என்ன டாக்டரா? என்று கேட்டார். கர்த்தரால் முடியும் தானே என்றேன். அவர் ஒப்புக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை விடுமுறை முடிந்து சனிக்கிழமை அலுவலகம் சென்றேன். அங்கு சகஊழியர் ஒருவர் இனிப்பு வழங்கினார். வியாழன் இரவு மற்றொரு சகஊழியருக்கு இந்தியாவில் ஆண்குழந்தை பிறந்ததாகவும், அந்த ஆண்குழந்தை மிகவும் பிரச்சனையான பிரசவம் நடந்து பிறந்ததாகவும் கூறினார்.

குழந்தையின் தந்தை சில நாட்களுக்கு பின் துபாய் வந்தார். வந்தவர் நடைப்பெற்ற பிரசவம் குறித்து மிக ஆச்சரியமாக விளக்கிக் கூறினார். சிசுவின் கழுத்தைச் சுற்றி தொப்புள்கொடி மிக நேரமாக இருந்ததால் குழந்தை இறந்து பிறக்கும் என்று மருத்துவர்கள் கைவிட்டனராம். ஆனால் சில மணிநேரத்திற்கு பிறகு தொப்புள் கொடி தானாகவே கழுத்திலிருந்து அவிழ்ந்ததாம். அவிழ்ந்ததைக் கண்டவுடன் சிசேரியன் செய்தார்களாம்.

அந்த நிகழ்வை கேட்டதும் புல்லரித்துப் போனேன். தேவன் ஒரு ஆத்துமாவை எப்படி நேசிக்கிறார் என்று புரிந்தது. அந்த ஆண்குழந்தையின் பெற்றோர் கிறிஸ்துவை அறியாதவர்களே. கர்த்தரை ஸ்தோத்தரித்து அவருக்கே நான் மகிமை செலுத்தினேன். அந்த ஆண்குழந்தையை சில நாட்கள் கழித்து என் கைகளில் ஏந்தியபோது யாருக்கும் தெரியாமல் என் தேவனை ஸ்தோத்தரித்தேன். என் தேவன் ஆச்சரியமாய் அனுகூலம் செய்து பிறப்பித்த குழந்தையல்லவா!

ஆகவே இது போல ஆவியானவர் உங்களை முழுதுமாக வழிநடத்த ஒப்புக் கொடுக்கும் போது அற்புதங்களை கர்த்தர் செய்கிறார்.

இந்நிகழ்வின் பிறகு இப்படிபட்ட ஆவிக்குரிய காரியங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. பலவற்றிற்கு நிகழ்வின் விளக்கம், சொன்ன சாட்சியின் விளக்கம் போல் வந்ததில்லை. வராவிட்டால் என்ன! என் தேவனின் சித்தத்தை செய்வது தானே என் போஜனம்!

சுயசித்தம் நம்மை வீழ்த்தும். தேவ சித்தத்தை செய்ய இயேசுவின் நாமத்தில் பிதாவானவர் அனுப்பிய ஆவியானவருக்கு ஒப்புக்கொடுப்போம். அவரே நம்மை வழிநடுத்தி பிதாவின் சித்தத்தை நம் வாழ்வில் செய்ய ஒப்புக் கொடுப்போம். நம் வாழ்க்கையிலும் "பிதாவே உம் சித்தத்தை முழுவதுமாக செய்து முடித்தோம்"  என்று சொல்லும் படியாக தேவ ஆவியானவருக்குக் கீழ்படிந்து வைராக்கியமாக தேவ சித்தத்தை செய்யும் பிள்ளைகளாக இருப்போம். ஆமென்.

No comments:

Post a Comment