Tuesday, 8 November 2016

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கை - பகுதி 7

கேட்க வேண்டும் என்பதையா பேசுகிறீர்?


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சை கேட்க விரும்புபவர்கள் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை சொல்கிறீர்களா? அப்படி செய்தால் நீங்கள் ஒரு மாய்மால வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

முகஸ்துதி பாடுவோருக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை. 

இயேசு யாருக்கும் முகஸ்துதி செய்யவில்லை. பரிசேயர்களை நோக்கி உங்களுக்கு ஐயோ! என்று கடிந்து கொண்டவர். பிலாத்து தன் அதிகாரத்தை குறிக்கும் விதமாக, "உன்னை சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டு"  என்ற போது, ஆளுகையில் உள்ள பிலாத்துவை நோக்கி "பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய உமக்கு என் மேல் அதிகாரம் இல்லை" என்று கூறுவதைக் காணுங்கள்.

அப்பிரயோஜனமான ஊழியக்காரர்


போதகர்களும், ஊழியம் செய்பவர்களும் மிகவும் உன்னிப்பாக இயேசுவின் வாழ்க்கையை கவனித்து அவரைப் போலவே வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு நிகழ்வை உருவகப் படுத்தி காணலாம்!

உங்களை தேவ ஆவியானவர் ஒரு சாலையில் நடந்து செல் என்று பணிக்கிறார். 

அவ்வழியே ஒரு ஆளுனரின் சீருந்து (கார்) செல்கிறது. அந்தக் காரில் ஏறி சுவிசேஷம் சொல் என்று சொல்கிறார். நீங்கள் செய்வீர்களா?

செய்தால் தேவனுடைய சித்தத்தை செய்தவர் நீங்கள்.

அப்போஸ்தல நடபடிகள் 8:26-40 படியுங்கள். பிலிப்பு தேவ சித்தத்தை செய்தான். எத்தியோப்பிய அண்ணகன் இரட்சிக்கப்பட்டான். அவன் "நான் எப்படி ராஜ பிரதாணியின் வாகனம் அருகே செல்ல முடியும்? அவன் இரதத்தில் உள்ள வீரர்கள் என்னைக் கொன்று போடுவார்களே" என்று சாக்கு போக்கு சொல்லவில்லை.

இயேசு சொல்கிறார்,  "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது."

நான் இதைச் செய்தேன், அங்கு சென்றேன் பிரசங்கித்தேன், ஊழியம் செய்தேன், சுவிசேஷம் அறிவித்தேன் என்று சொல்கிறீர்களா. அந்த வார்த்தைகளில் நான், றேன், தேன் மாற்றுங்கள். தேவன் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை மட்டுமே செய்து முடியுங்கள். செய்த பின்னர் இயேசு சொன்ன படியே

"உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்"

கர்த்தர் நமக்கு அருளிய கிருபைகளை நாளும் நினைவு கூர்வோம்.  

No comments:

Post a Comment